காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வட்டுவாகலில் நிறுத்தப்பட்டு கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பஸ் விவரங்கள் மற்றும் சாரதியின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டன. அதேபோன்று கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் இருந்தும் யாழ்ப்பாணம் நோக்கி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஏற்றி வந்த பஸ்கள் இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விவரங்கள் சோதனையிடப்பட்டன.
தைப் பொங்கல் நிகழ்வுக்காக இன்று (ஜனவரி 15) யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வந்திருந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் உட்படப் பலர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
அதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பஸ்களில் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். அவர்கள் பயணித்த பஸ்களே சோதனைக்குட்படுத்தப்பட்டு பல நிமிடங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், ஆனையிறவில் அதிகளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், போக்குவரத்துப் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அங்கும் பஸ்கள் நிறுத்தப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.