“வவுனியா மாநகரசபை மேயர் பதவியை நான் கோரவில்லை. ஆனால் ஜனநாயக முறையில் அந்த பதவி எனக்குத் தக்கவராக வழங்கப்படும் என்றால், அதை ஒரு முன்மாதிரியாக மாற்றிக் காட்டுவேன்” என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வவுனியா மாநகரசபை உறுப்பினர் சு. காண்டீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாநகரசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் சுந்தரலிங்கம் காண்டீபன் மேயர் பதவியை எதிர்பார்ப்பதாக வெளியான செய்திகள் தொடர்பாக தெரிவித்ததாவது:
“இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாநகரசபையின் முதலாம் வட்டாரத்தில் நான் அதிக வாக்குகளைப் பெற்று வென்றேன். கடந்த தேர்தலிலும் வீட்டு சின்னத்தில் வெற்றி பெற்று, நான் செய்த பணிக்கு மக்கள் மீண்டும் அங்கீகாரம் அளித்து சங்கு சின்னத்தில் அதிக வாக்குகள் மூலம் வெற்றிபெற வைத்துள்ளனர்.
தேர்தல் முடிவுக்குப் பின்னர், மேயர் மற்றும் பிரதிமேயர் பதவிகளைப் பற்றி கட்சித் தலைவர்கள் கலந்துரையாடும் என முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதிக வாக்குகள் பெற்று வென்ற எனது செயற்பாடுகளை முன்வைத்து, எனது ஆதரவாளர்களும், எனது புலொட் அமைப்பும் எனக்கு மேயர் பதவி வழங்கப்பட வேண்டுமெனக் கோருகின்றனர். எனினும், அந்த பதவியை நான் நேரடியாக கோரவில்லை.
அந்த பதவி ஜனநாயக முறையில் எனக்கு வழங்கப்படுமானால், நான் அனைவரையும் இணைத்து, மாநகரத்தை ஒரு முன்னுதாரணமாக வழிநடத்துவேன். மேலும், அடுத்த தேர்தலிலும் சங்கு சின்னத்தில் அதிக வாக்குகளுடன் வெற்றிபெறும் நிலையை உருவாக்க முயற்சிப்பேன். மக்கள் விருப்பங்களை கட்சி தலைமைகள் மதிக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.