உறவினரின் மரணச் சடங்கில் பங்கேற்றவருக்கு கொரோனா
-குருக்கள் உட்பட 8 பேர் தனிமை படுத்தல்-
மரணச் சடங்கில் பங்கேற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து முறையாக முகக் கவசம் அணியாமல் இறுதிக்கிரிகைகள் செய்த குருக்களும், உதவியாளரும் உட்பட 8 பேர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை வியாபாரிமூலை பகுதியில் இடம்பெற்ற மரணச் சடங்கொன்றில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பருத்தித்துறை பொதுச் சுகாதார பரிசோதகரால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
தொற்றுறுதியானவர் தொடர்பாளர்களை இனங்காட்டத் தவறிய நிலையில் இறுதிக்கிரிகைகள் தொடர்பாக சமூக ஊடகத்தில் வெளியாகிய காணொளியை புலனாய்வுக்குட்படுத்தி பொது சுகாதார பரிசோதகரால் குறித்த தொடர்பாளர்கள் ஆதாரங்களுடன் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.