வடக்கு, கிழக்கு, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவி விலக வேண்டும் என்று அரசாங்கத்தால் பணிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விலகியதும் புதிய ஆளுநர்கள் நால்வரை நியமிப்பதற்கு ஐவரின் பெயர்கள் இதுவரை முன்மொழியப்பட்டுள்ளன. அவர்களுள் நால்வர் அரசியல்வாதிகள், ஒருவர் அதிகாரி என்றும் தெரியவருகின்றது.
நான்கு அரசியல்வாதிகளுள் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, நவீன் திஸாநாயக்க, தயா கமகே ஆகியோரின் பெயர்கள் அடங்குகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரிட்டனிலிருந்து நாடு திரும்பியதும் புதிய ஆளுநர்களின் நியமனம் இடம்பெறும் என்று கடந்த வாரம் அரச தகவல்கள் தெரிவித்திருந்தன.
ஜனாதிபதி இவ்வாரம் திங்கட்கிழமை நாடு திரும்பினார். எனினும், புதிய ஆளுநர்கள் நியமனம் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.