புரேவிப் புயலினால் நெடுந்தீவுப் பிரதேசம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனது கரையோரங்கள் கடலரிப்பினால் பெருமளவாக உள்வாங்கப்பட்டுள்ளன. கடலரிப்பினால் காவுகொள்ளப்படவுள்ள நெடுந்தீவைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்தார் யாழ் மாவட்டச் செயலர் கே. மகேசன்.
இலங்கையின் வடபகுதியில் ஏற்பட்ட புரேவிப் புயலினால் அதிகம் பாதிக்கப்பட்ட நெடுந்தீவுப் பிரதேசத்தைப் பார்வையிட்டுத் திரும்பியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
புரேவிப் புயலினால் நெடுந்தீவுப் பிரதேசம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தீவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. சில இடங்களில் 3 அடிக்கு மேல் வெள்ளம் நிறைந்துள்ளது. சில கிராமசேவையாளர் பிரிவுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இன்று வரை முற்றாகத்துண்டிக்கப்பட்டுள்ளது. மின் பிறப்பாக்கி வைக்கப்பட்டுள்ள அலுவலகத்தினுள் நீர் புகுந்துள்ளமையால் அதனை உடனடியாக இயங்க வைக்க முடியாத நிலமை தோன்றியுள்ளது. அது சம்மந்தமாக இலங்கை மின்சார சபையின் மாவட்டமின் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். விரைவாக மின் கிடைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
கடலை நம்பி வாழும் 40க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. வலைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அவர்களுக்கான வாழ்வாதாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றை விரைவுபடுத்துமாறு பணித்துள்ளேன்.
கரையோரப் பிரதேசங்கள் கடுமையான கடலரிப்புக்குள்ளாகியுள்ளன. கரையோரத்தில் அமைந்துள்ள இரண்டு குடியிருப்பு வளவுகள் கடலரிப்பினால் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை நேரில் அவதானித்துள்ளேன்.
பாதிக்கப்பட்டுள்ள சுமார் 760 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுவ தற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலர் மேற்கொண்டுள்ளார். அதனைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன். வெள்ளம் வடிந்தோடுவ தற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் மழையுடனான காலநிலை தொடருமானால் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதக நிலமைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. இறங்கு துறை முற்றாகச் சேதமடைந்துள்ளதால் அதனைப் புனரமைப்பதற்கான முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்- என்றார்.