நெடுந்தீவில் புறாக்களை கூட்டோடு எரித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நெடுந்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டோர் பிணையில் விடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நெடுந்தீவில் இருந்து பயணிகள் படகுமூலம் 44 புறாக்களை குறிகட்டுவான் பகுதி ஊடாக எடுத்துச் செல்ல முயன்ற போது புறாக்களுடன் துறைமுகத்தில் வைத்து குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மேலதிகமாக புறாக்கள் நெடுந்தீவு செபநாயகபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் வைக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலும்..

சில நாட்களுக்கு முன்னர் 144புறாக்கள் நெடுந்தீவுக்குக் கடத்தி வரப்பட்டதாகவும், அவற்றை பகுதிகளாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவற்றை மீட்கப் பொலிஸார் வருவதை அறிந்த வீட்டு உரிமையாளர்கள், சட்ட நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் புறாக்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டிற்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், 50 இற்கும் மேற்பட்ட புறாக்கள் தீயில் கருகி உயிரிழந்ததையும், பல புறாக்கள் கடுமையாகக் காயமடைந்திருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாகக் கூண்டைத் திறந்ததன் மூலம் சில புறாக்கள் பறந்து சென்று உயிர் தப்பியுள்ளன. இந்த மனிதாபிமானமற்ற செயல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நெடுந்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டோர் பிணையில் விடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது
சம்பவம் தொடர்பான விசாரணையினை நெடுந்தீவு பொலிசார் முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது