பயணிகள் போன்று பாசாங்கு செய்து முச்சக்கரவண்டிச் சாரதிகளிடம் பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்ற இரு சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் நடந்துள்ளது. இந்த இரு திருட்டுச் சம்பவங்களிலும் ஒரே கும்பலே ஈடுபட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டிச் சாரதிகள் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று (மே 4) பருத்தித்துறையில் இருந்து ஒரு பெண்ணும், இரு ஆண்களும் முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி கீரிமலைக்கு வந்துள்ளனர். கீரிமலையில் உள்ள தங்களின் காணிகளைப் பார்க்கச் செல்கின்றோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கீரிமலையில் முச்சக்கரவண்டிச் சாரதிக்கு குளிர்பானம் ஒன்றை அவர்கள் கொடுத்துள்ளனர். அதை அருந்திய சாரதி மயக்கமடைய சாரதியின் நகை மற்றும் பணத்தைத் திருடித் தப்பிச் சென்றுள்ளனர்.
இதேகும்பல் பருத்தித்துறை செல்வதற்கு கீரிமலையில் முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளது. செல்லும் வழியில் அந்த முச்சக்கரவண்டிச் சாரதிக்கும் குளிர்பானம் கொடுத்து மயக்கமடைய வைத்து பணம் மற்றும் நகைகளைத் திருடித் தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.