அரசாங்க நிவாரணங்களை மட்டுமே சார்ந்து வாழும் குடும்பங்கள், தங்களின் சொந்த வருமானத்தை உருவாக்கி பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்ற நோக்கில், அஸ்வெசும பயனாளிகளுக்கான சிறப்பு சலுகைக் கடன் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 2 இலட்சம் அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் வாழ்வாதார ரீதியாக வலுவூட்டும் இலக்குடன், சமுர்த்தி வங்கிகள் ஊடாக ரூ. 500,000 வரை கடன், 6% குறைந்த வட்டியில் வழங்கப்படவுள்ளது.
இந்த வட்டியில் 4% இனை அரசாங்கம் திறைசேரி நிதி மூலம் சமுர்த்தி வங்கிகளுக்கு செலுத்துவதற்காக ரூ.500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடன் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
ரூ. 500,000 வரை சலுகைக் கடன்.
முதல் 12 மாதங்கள் சலுகைக் காலம் – இந்தக் காலப்பகுதியில் கடன் முதற்தொகை தவணையை செலுத்த வேண்டிய அவசியமில்லை, வட்டியை மட்டும் செலுத்தினால் போதும்.
சமுர்த்தி வங்கியில் சேமிப்புக் கணக்கு கொண்ட உறவினர்களின் பிணையுடன் கடன் பெறும் வசதி.
சிறு வியாபாரங்கள், குடிசைக் கைத்தொழில்கள், சுயதொழில்கள் ஆகியவற்றை ஆரம்பிக்கவும் விரிவுபடுத்தவும் பயன்படுத்தலாம்.
அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களின் பிள்ளைகளின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்விக்காகவும் இந்தக் கடன் பெற முடியும்.
அஸ்வெசும பயனாளிகள் தங்களது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி வங்கியை அணுகி இந்தத் திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது