முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் மகேஷ்வரனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (ஜனவரி 01) ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வு, ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினருமான விஜிமருகன் தலைமையில் ஒழுங்குபடுத்தப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பமாக இறைவழிபாடுகள் இடம்பெற்றதுடன், தொடர்ந்து ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டன. பின்னர் மறைந்த அமைச்சர் மகேஷ்வரனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
நிகழ்வின் இறுதிக்கட்டமாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் விஜிமருகன், வாசுதேவக்குருக்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.