வடக்கு மாகாணத்தில் புனரமைப்புச் செய்யப்படாதுள்ள ஆலயங்களைப் புனரமைத்து அவற்றை மீளச் செயற்படக் கூடியவாறு மாற்றியமைப்பது தொடர்பான விசேட ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒன்றுகூடலில் அனைத்து ஆலயங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்த வேண்டும் என்று வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அறிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் இணைந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் 021 205 4105 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகத் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த நிலையில் காணப்படும் ஆலயங்களைப் புனரமைத்து வழிபடக்கூடியவகையில் மாற்றியமைத்தல்
நித்திய பூசைகளைச் செய்ய முடியாத நிலையில் காணப்படும் ஆலயங்களுக்கு உதவுதல்
ஆலயக் கேணிகள் மற்றும் குளங்களைப் புனரமைத்தல்
ஆலயத்தில் சமய நெறிசார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடிய வகையில் ஏற்பாடு செய்தல்
போன்ற விடயங்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்துரையாடப்படவுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.