யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் பௌர்ணமி தினத்தை ஒட்டி நேற்று (மே 12) காலை 10.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் சிறப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதியும், மதிக்கத்தக்க பௌத்த சிருத்தேரவுமான மீஹாஹ ஜந்துறே ஸ்ரீ விமல தேரோ அவர்கள் கலந்து கொண்டு வெசாக் தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் தம்ம உரையை நிகழ்த்தினார். இதில், புத்தர் பிறந்த நாள், ஞானம் பெற்ற தினம் மற்றும் பரிநிர்வாணத்தை அடைந்த நாளாகவே வெசாக் பௌர்ணமி தினம் சிறப்பு வாய்ந்தது எனவும், அனைவரும் தர்மத்தின் பாதையில் நடந்து, பாவங்களிலிருந்து விலகி வாழ வேண்டும் என்பதே புத்த போதனையின் சாரம்சம் எனவும் அவர் கூறினார். மேலும், உலகில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்றும், புத்த தர்மத்தின் அடிப்படை என்பது மக்கள் அனைவரும் சமமாக இருப்பதே என்பதையும் வலியுறுத்தினார்.
நிகழ்வில், யாழ் மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் YABM ஜகம்பத், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க. ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் திரு எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்டச் செயலகத்தின் உயரதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெசாக் தின ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டனர்.