கொத்மலை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்கு ஜனாதிபதி இரங்கல்
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (மே 11) காலை நிகழ்ந்த பேருந்து விபத்தில் பலர் உயிரிழந்தமைக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த விபத்து செய்தியை கேட்டு தான் மிகுந்த அதிர்ச்சி மற்றும் மனவலி அடைந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டி பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில், “நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதுபோன்ற அனர்த்தங்களைத் தடுக்கும் நோக்கில் நிரந்தர தீர்வு காணும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது” என அவர் கூறியுள்ளார்.
மேலும், தற்போது நிலவும் சட்டங்களை திறம்பட அமல்படுத்துவதன் மூலம் மற்றும் சாரதிகளின் பொறுப்புணர்வையும் பாதுகாப்பு குறித்து அவர்களது விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் வீதி விபத்துகளை குறைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் இதற்கான வேலைத்திட்டம் முன்பே தயாராகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை நடைபெற்ற இந்த துயரமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த ஜனாதிபதி, காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திப்பதாகவும், அவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்குவதற்காக அனைத்து சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்திற்கு எதிராக அவசியமான மேலதிக நடவடிக்கைகளை எடுக்க பாதுகாப்புப் படையினரும் சுகாதாரத் துறைகளும் உத்தரவுபெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.