எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, மக்களின் வாழ்க்கைச் செலவை குறைத்து உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும பயனாளிகளாக பதிவு செய்யப்பட்டு தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 8 இலட்சம் குடும்பங்களுக்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக தள்ளுபடி விலையில் உணவுப் பொதிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் கீழ், 5000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி 50% தள்ளுபடியில், அதாவது 2,500 ரூபாவுக்கு வழங்கப்படும். சதொச விற்பனை நிலையங்கள் இல்லாத பகுதிகளில் தகுதியான பயனாளிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு விற்பனை நிலையங்கள் (COOPFED) மூலம் இந்த சலுகை வழங்கப்படும்.
812,753 அஸ்வெசும பயனாளிக் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 13 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் இந்தத் திட்டம், தகுதியான நபர்களுக்கு முறையாக சென்றடைவதை உறுதி செய்யும் தனித்துவமான பொறிமுறையுடன் செயல்படுத்தப்படும்.
நிதி அமைச்சு, உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு, மற்றும் கூட்டுறவு விற்பனை நிலைய வலையமைப்பு ஆகியவை இணைந்து “சத்துடின் சதொசின்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்துகின்றன.
தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு கொண்டாடப்படும் முதல் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பற்றாக்குறையின்றி, மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்ய இந்தத் திட்டம் முக்கியமானதாக அமையும்.