இறைவனடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் இறுதி கிரியா நிகழ்வுகள் இன்று (மே 2) நல்லை ஆதீனத்தில் நடைபெறவுள்ளன.
கொழும்பில் சிகிச்சை பெற்று வந்தபோது சிகிச்சை பலனளிக்காமல், நேற்று இரவு (மே 1) சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்கள்.
சுவாமிகளின் புகழுடல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு, இன்று (மே 2) மாலை 4 மணிக்கு இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளன.
சுமார் அரை நூற்றாண்டுகாலமாக ஈழத்தில் சைவ சமயத்திற்கு தலைமை வகித்து, இளமைத்திலிருந்தே தம் வாழ்க்கையை சைவ ஒளிக்காக அர்ப்பணித்த ஆதீன சுவாமிகளின் இறுதி நிகழ்வுகளில், சைவ உலக மக்கள் திரண்டு பங்கேற்குமாறு சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.
இதனிடையே, ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் பூரணரமடைந்த செய்தி, சைவ சமூகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று இந்துக்குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
“இந்தியா மதுரை ஆதீனத்துடன் 1966ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆதீனம், சமயமும் சமூகத்திற்கும் சேவையாற்றி பல நற்பணிகளில் ஈடுபட்டுள்ளது.
முதலாவது ஆதீனக் குருவாக மணிஐயர் அவர்கள் பதவி வகித்தனர். தொடர்ந்து இரண்டாவது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் ஆவார்கள்.
அவர் அமைதியான சுபாவமுடையவராக, அனைவரையும் அன்புடன் வரவேற்கும், அரவணைக்கும் ஒரு மகாபுருஷராக இருந்தார்.
இச்சமயத்தில், நாம் அனைவரும் சுவாமிகளின் திருவடிகளில் பணிந்து, சிவசாயுச்சிக்கு செல்லும் அவருடைய ஆன்மா பரம்பொருளின் பாதத்தில் நம்முடைய பிரார்த்தனைகளை செலுத்துவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.