உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் மே 3ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, மே 3ஆம் திகதி முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இன்று வரை வீடு வீடாகச் சென்று உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினத்திற்கு பின்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் இந்த மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னர் தங்கள் பகுதியில் உள்ள உப தபால் அலுவலகத்திற்குச் சென்று தமக்கான வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இம்முறை உள்ளூராட்சித் தேர்தலின் போது வாக்களிக்கும் போது சுண்டு விரலைப் பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் 94 வீதத்துக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றுடன் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள், தத்தமது பிரதேசங்களில் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களில் தங்களது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.