ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (மார்ச் 06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதற்கான முன்னேற்றங்கள் பற்றிய விவாதங்கள் நடைபெற்றன.
மேலும், கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், அவற்றிற்கான தீர்வுகள், மற்றும் புதிய சீர்திருத்தங்கள் அமல்படுத்தும் தேவையையும் கருத்தில் கொண்டு கலந்துரையாடப்பட்டது.
பாடசாலை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி துறைகளை மேம்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் முக்கியமான அம்சங்கள் கவனிக்கப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய, கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார உள்ளிட்ட கல்வித் துறையின் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.