எழுதாரகை பயணிகள் படகுச் சேவையை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் வழங்கப்பட்ட எழுதாரகை பயணிகள் படகுச்சேவை 2019ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. தற்போது இந்தப் பயணிகள் கப்பல் எழுவைதீவு இறங்கு துறையில் தரித்துள்ளது.
இதனால் ஊர்காவற்றுறை- காரைநகர் – எழுவை தீவு – அனலைதீவு – நயினாதீவு வரையான சேவை இடம்பெறுவதில்லை. படகுச்சேவையை பயன்படுத்தும் பயணிகள் இதனால் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டப்பணிப்பாளர் குரூஜூடன், காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் கலந்துரையாடியுள்ளார்.
இந்தப் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆவண செய்யப்படும் என்று திட்டப்பணிப்பாளர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் காரைநகர் இறங்குதுறையிலிருந்து இந்தச் சேவையை நடத்த வேண்டும் என்று தவிசாளரால் சுட்டிக்காட்டப்பட்டது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்பு காரைநகர் துறைமுகத்திலிருந்து படகுச் சேவைகள் நடத்தப்பட்டமையும் சுட்டிக்காட்டப்பட்டது.
எதிர்வரும் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்துக்கும் காரைநகரிலிருந்து பயணிகள் கப்பல் சேவையை நடத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.