சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் சொற்களுக்கான ஆங்கில அர்த்தங்களை துல்லியமாகவும் சரளமாகவும் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த அபூர்வ திறனை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யும் முயற்சியில் சிறுமியின் பெற்றோர் ஈடுபட்டு வருகின்றனர்.
காலநிலை, விலங்குகள், மின்னணு சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளுக்குட்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட சொற்கள் தமிழில் கேட்கப்பட்டபோது, அவற்றின் ஆங்கிலப் பொருளை சரியாக வழங்கும் திறனை இச்சிறுமி வெளிப்படுத்தியுள்ளார்.
முச்சக்கரவண்டி ஓட்டுநராக உள்ள தந்தையையும், குடும்பப் பெண்ணாக உள்ள தாயையும் கொண்ட சாதாரணக் குடும்பத்தில் பிறந்த இவர், பாடசாலை கல்வியை இன்னும் தொடங்காத நிலையிலேயே இவ்விதம் அபார ஞாபக சக்தியை வெளிப்படுத்தியிருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் இன்று (01) யாழ்ப்பாண ஊடக அமையத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தனர்.
இதில், சிறுமியின் இந்த அபூர்வ திறனை வெளிக்கொணருவதோடு, அதனை உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான ஆதாரங்களைச் சேகரித்து கின்னஸ் சாதனை அமைப்புக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சிறுமியின் இந்த திறமை, அவரது வயதை மிஞ்சிய நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை வெளிப்படுத்துவதோடு, பாராட்டுக்குரிய ஒன்று என பெருமையாகக் குறிப்பிடப்படுகிறது.