வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டின் பாதீடு தேசிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஒருவரது எதிர்புடன் மேலதிக 12 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று (17/12) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமாரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது சபையின் வருமானம் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள், புதிய உள்ளீர்ப்புகள், வரி அறவீடுகள், அரச அதிகாரிகளின் ஊதியச்சுமை உள்ளிட்ட பல்வேறு விடையங்களை சுட்டிக்காட்டி காலத்தின் தேவையோட்டத்துக்கேற்ப முன்வைக்கப்படும் பாதீடு உள்ளதால் அதை நிறைவேற்றுவது அவசியம் என்று தெரிவித்தார்.
இன்நிலையில் சபையின் விவாதத்துக்கு பாதீடு விடப்பட்ட நிலையில் பல்வேறு விமர்சனங்கள் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக மக்கள் நலனோ தற்போதைய தேவை கருதிய நடைமுறைக்கு ஏற்றதோ இல்லாது குறித்த பாதீடு முன்மொழியப்பட்டுள்ளதாகவும், நடைமுறை சாத்தியமான விடையங்களை உதாசீனம் செய்துள்ளதாகவும் கூறி தேசிய மக்கள் கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஒருவர் எதிராகவும் குறித்த பாதீட்டை நிராகரித்தனர்.
வாத பிரதிவாதங்களுக்கு பின்னர் பாதீட்டை நிறைவேற்றும் பொருட்டு தவிசாளரால் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
பாதீட்டை நிறைவேற்றுவதற்காக விடப்பட்ட வாக்கெடுப்பின் போது 22 உறுப்பினர்களில் ஆதரவாக 17 வாக்குகளும் எதிராக 5வாக்குகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த பாதீடு மேலதிக 12 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது குறித்த பிரதேச சபையின் 22 மொத்த ஆசனங்களில்
08 உறுப்பினர்களை தமிழரசுக் கட்சியும் , 03 ஆசனங்களை ஈ.பி.டி.பியும், 04 ஆசனங்களை தேசிய மக்கள் கட்சியும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 02 உறுப்பினர்களையும், சுயேச்சைக் கட்சிகளின் உறுப்பினர்கள் 03 ஆசனத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் முன்னணி தலா ஒவ்வோர் ஆசனத்தையும் பெற்றிருந்தன.
இதே நேரம் இரு உறுப்பினர்களை கொண்ட சைக்கிள் கட்சியில் ஒரு உறுப்பினர் ஆதரவும் மற்றொருவர் எதிராகவும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.