இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவராக பணியாற்றி வந்த பேராயர் பிரயன் உடெய்க்வே, தனது பதவிக்காலம் நிறைவடைந்து புறப்படுவதற்கு முன்னர், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரதவை இன்று (மே 21) அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்தார்.
2020 ஆம் ஆண்டு முதல் தூதுவராக பணியாற்றிய அவர், இலங்கையில் இருந்த காலம் மறக்க முடியாத அனுபவங்களால் நிரம்பியது என்றும், இலங்கை தனது நினைவில் நீடிக்கும் அழகான நாடாக என்றும் தெரிவித்தார்.
மேலும், பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதற்காக, வத்திக்கானின் சார்பில் அமைச்சர் விஜித ஹேரதுக்கு தனது நன்றியைத் தூதுவர் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், இலங்கைக்கு ஆதரவளித்து வந்த வத்திக்கானின் செயல்பாடுகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் எத்தியோப்பியாவுக்கான வத்திக்கான் தூதுவராகப் பதவியேற்கவுள்ள பேராயர் பிரயன் உடெய்க்வேக்கு தனது உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.