முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் கணவன் மனைவி உட்பட ஐந்து பேர் வீட்டில் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றையதினம் (15/12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூங்கிலாறு வடக்கில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் ஐஸ் போதைப் பொருள் விற்பனைக்கு தயார் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த சந்தேகநபர்கள் நேற்றையதினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து 2 வாள்கள், 61,000 ரூபா பணம் மற்றும் சுமார் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.