பருத்தித்துறை காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையின் மூலம் சுமார் மூன்று கோடி ரூபாவிற்கு அதிக பெறுமதியுடைய 100 கிலோவுக்கு அதிக எடையுடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பெண் ஒருவர் உட்பட நால்வர் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பருத்தித்துறை காவல்துறையினரால் கடந்த சனிக்கிழமை அதிகாலை சுப்பர்மடம் கடற்கரையில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை கேரள கஞ்சா பொதிகள் வாகனம் மூலம் எடுத்துச் செல்ல பட்டிருந்தன.
இருந்த போதிலும் கடத்தலில் ஈடுபட்ட இருவர் படகுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் கடத்தலின் போது துணை புரிந்த மேலும் ஒரு படகு அடையாளம் காணப்பட்டு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இரண்டு படகு வெளி இணைப்பு இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து பருத்தித்துறை காவல்துறை விசேட பிரிவின் தகவலுக்கு அமைவாக நடத்திய தேடுதலின் போது பருத்தித்துறை அவ்வொல்லை பகுதியில் உள்ள வீடென்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு பைகளில் காணப்பட்ட 46 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.
இதன்போது குறித்த வீட்டில் இருந்த பெண் ஒருவரும் பருத்தித்துறை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.