வலிகாமம் வடக்கில் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தங்கள் காணிகளை அடையாளப்படுத்தி, தங்களுக்குச் சொந்தமான உடமைகளை பாதுகாப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளாதிருக்கும் காணி உரிமையாளர்கள் உடனடியாக அவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று தெல்லிப்பழை பிரதேச செயலகம் கோரியுள்ளது.
மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் தங்களுக்குரிய சொத்துக்கள் மற்றும் உடமைகளைத் திருட்டுக் கும்பல்களிடம் இருந்து மீட்பதற்கு பொதுமக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து உதவ வேண்டும் என்றும் தெல்லிப்பழை பிரதேச செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
30 ஆண்டுகளாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி.வடக்கின் சில பிரதேசங்கள் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. அவை விடுவிக்கப்பட்டவுடன் ஊடகங்கள் மூலமும், கிராம மட்ட அலுவலர்கள் ஊடாகவும் இது தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு, காணிகளின் உரிமையாளர்கள் தங்கள் காணிகளை அடையாளப்படுத்தி சொத்துக்களையும், உடமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று கோரியிருந்தோம்.
எமது கோரிக்கைக்கு அமைய பல பொதுமக்கள் தங்கள் காணிகளையும், சொத்துக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆயினும் இன்னமும் சிலர் தங்கள் காணிகளை அடையாளப்படுத்துவதிலும், சொத்துக்களைப் பாதுகாப்பதிலும் அசமந்தமாக உள்ளனர்.
இதைப் பயன்படுத்தி நாடு முழுவதிலுமு் இருந்து வரும் திருட்டுக் கும்பல்கள் பெறுமதியான சொத்துக்களைத் திருடிச் செல்லும் நடவடிக்கைககளில் ஈடுபட்டுள்ளனர்.
மிகப் பரந்தளவான பிரதேசத்தில் 24 மணிநேரமும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவது இயலாத காரியம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
கிராம மட்ட அலுவலர்களும், பொலிஸாரும் பொதுமக்களின் உடமைகளைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தாலுமு் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவது நடைமுறைச்சாத்தியமற்ற விடயம்.
காணி உரிமையாளர்கள் தங்கள் காணிகளை அடையாளப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.
காணி உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து இருப்பின், அவர்கள் தங்கள் நம்பிக்கைக்குரிய உறவினர்கள் அல்லது நண்பர்கள் உதவியுடன் காணிகளை அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுவிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்தக்காணிகளில் குடியமர இயலுமானவரை முயற்சியுங்கள். அது உடனடியாகச் சாத்தியமற்றது என்றில் காணிகளைத் துப்புரவாக்கி அவற்றை அடையாளப்படுத்துங்கள்.
இந்த விடயத்தில் ஏதேனும் உதவிகள் தேவைப்படுமிடத்து பிரதேச செயலகம் அந்த உதவிகளை வழங்கத் தயாராக உள்ளது என்று பிரதேச செயலக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.