வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், அதன் இறுதிக்கட்ட பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று (மார்ச் 12) மாலை யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில், இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து திருவிழாவிற்கு வருகை தரவுள்ள பக்தர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவுப் ஏற்பாடுகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் வழங்கல், ஒலி-ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதில், யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், இந்திய துணைத் தூதுவர் திரு இ. நாகராஜன், இந்திய துணைத் தூதரக அதிகாரி செல்வி சி. எஸ். ரம்மியா, வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளை தளபதி, பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவப் பிரதிப்பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.