இன்று இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் மகிழ்ச்சியுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகிய நோன்பை, ரமழான் மாதம் முழுவதும் கடைப்பிடித்த முஸ்லிம்கள், இன்று (மார்ச் 31) புனித ஈதுல் பித்ர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள்.
இஸ்லாமிய சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் நோன்பு, ஏழைகளின் பசியை உணர்ந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயரிய பாடத்தைக் கொடுப்பதாகும்.
புனித ரமழான் மாதத்தில் சிரத்தையுடன் விழித்திருந்து, பசித்திருந்து, தன்னடக்கத்துடன் நோன்பு கடைப்பிடித்த முஸ்லிம்கள், இன்று மகிழ்ச்சியோடு நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.
ரமழான் மாதத்திற்கு பின்னர் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டவுடன், ஈதுல் பித்ர் திருநாள் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
முஸ்லிம்களின் இரண்டு முக்கிய திருநாள்களில் ஒன்றாகும் ஈதுல் பித்ர்.
நோன்புப் பெருநாளின் தினமான இன்று, முஸ்லிம் மக்கள் காலையில் நீராடி, நறுமணங்களைப் பூசித், புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்குச் சென்று விசேட தொழுகைகளிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபடுகிறார்கள்.