ஆசியாவில் உள்ள தலத் திருஅவைகள் அமைதிக்காக இறைவேண்டல் செய்து ஒருமைப்பாட்டுடன் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள ஆயர்கள், ஏழை எளியவர்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களின் ஆதரவையும் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தியதுடன் இடம்பெற்றுவரும் இப்போரினால் உலகளாவிய ரீதியில் கடுமையான மானுட மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்படுமெனவும் எச்சரித்துள்ளனர்.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட வன்முறைகள் குறித்து தமது கவலையை தெரிவித்துள்ள ஆயர்கள் அமைதி என்பது வன்முறையின் மூலம் அல்ல, பேச்சுவார்த்தையின் மூலமே ஏற்பட வேண்டுமென எடுத்துரைத்துள்ளனர்.
அத்துடன் இந்தப் போர் எளிய மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துமென சுட்டிக்காட்டிய ஆயர்கள் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து போர் மேலும் தீவிரமடைவதைத் தடுத்தல், மோதல்களுக்குத் தீர்வு காண மீண்டும் தூதரகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல், மனித உயிர்களைப் பாதுகாக்க மதங்களுக்கு இடையேயான ஒன்றிப்பை ஊக்குவித்தல் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.