தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக நிலவி வந்த எல்லைப் பிரச்சனை, தற்போது தீவிரமான மோதலாக வெடித்துள்ளது. இரு நாடுகளின் படைகளும் எல்லைப் பகுதியில் ரொக்கெட் மற்றும் பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோதலில் பொதுமக்கள் உட்பட 14 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த மோதலுக்கு முக்கிய காரணம்,
இரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள பிரேவிஹார் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலங்கள் குறித்த உரிமைப் பிரச்சனைதான். 1962-ல் சர்வதேச நீதிமன்றம் இக்கோவில் கம்போடியாவுக்குச் சொந்தமானது எனத் தீர்ப்பளித்தது. ஆனால், அதனைச் சுற்றியுள்ள நிலங்கள் குறித்து தெளிவான தீர்ப்பு அளிக்கப்படாததால், இந்த சர்ச்சை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
சமீபத்தில், எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கண்ணிவெடி விபத்து மற்றும் இரு நாடுகளும் தங்களது தூதர்களைத் திரும்ப அழைத்துக் கொண்ட நிகழ்வுகள், பதற்றத்தை மேலும் அதிகரித்தன.
தற்போது, தாய்லாந்து கம்போடியா மீது போர் விமானங்களைப் பயன்படுத்திக் குண்டுவீச்சு நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக, கம்போடியாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், இரு நாடுகளும் தங்களது எல்லைப் பகுதிகளை மூடியுள்ளன.
மேலும், தாய்லாந்து, எல்லைப் பகுதியில் உள்ள எட்டு மாகாணங்களில் அவசரநிலையை அறிவித்துள்ளது. சர்வதேச அமைப்புகளும் இந்த மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.