யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயர் ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம், கச்சத்தீவு தீவை சுற்றுலா தலமாக மாற்றும் அரசாங்கத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், கச்சத்தீவு இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் நீண்ட காலமாக சென்று வழிபடும் புனித தலம் என்பதால், அதனை சுற்றுலா தலமாக மாற்றுவது மத உணர்வுகளை புண்படுத்தும் செயல் என சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக, குறித்த முயற்சி மதத்துக்கும் சமூகத்துக்கும் அவமரியாதையாக இருக்கும் அபாயம் உள்ளதாகவும் மறைமாவட்டம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் திடீர் விஜயமாக கச்சத்தீவுக்குச் சென்றார். அவர் அங்கு செயின்ட் அந்தோனியார் ஆலயத்தையும் பார்வையிட்டதுடன், தீவுகள், கடற்கரை மற்றும் எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு என வலியுறுத்தினார்.


ஜனாதிபதியின் இவ்விஜயம், கச்சத்தீவைச் சுற்றியுள்ள அரசியல் மற்றும் சர்வதேச விவாதங்களின் சூழ்நிலையில் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக, இந்திய தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் கச்சத்தீவைப் பற்றிய கருத்து வெளியிட்ட சில நாட்களுக்குப் பின்னர், ஜனாதிபதி நேரடியாக கச்சத்தீவுக்குச் சென்றது கவனத்தை ஈர்த்தது.
மேலும், இந்த விஜயத்தின் போது கச்சத்தீவை சுற்றுலா தலமாக மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த பின்னணியில், குறித்த திட்டத்திற்கு யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.