ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தினால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வொஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நேற்று (25/04) மாலை இந்த விருந்துபசாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், திடீரென ஐந்து முதல் எட்டு வரையான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மண்டபத்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் பிரபலங்கள் பாதுகாப்பு தேடி மேசைகளுக்கு அடியில் பதுங்கியுள்ளனர்.

சம்பவம் நடந்த உடனேயே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதற்பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோரை இரகசிய சேவை அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், பாதுகாப்புப் பிரிவினரின் துரித நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார். அத்துடன், முதற்பெண்மணி, துணை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி நலமாக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட இந்த நிகழ்வு, அடுத்த 30 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்தப் பகுதியில் தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Share this Article
Leave a comment