செம்மணி மனித புதைகுழிகளில் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட சான்று பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில், எதிர்வரும் ஒகஸ்ட் 05ஆம் திகதி பிற்பகல் 1.30 மணி முதல் 5.00 மணி வரை அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் காட்சிக்கு வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, யாழ் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முன்னெடுக்கப்படும் ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் கருதப்படுவதால், பங்கேற்பவர்கள் கீழ்வரும் ஒழுங்குவிதிகளை கட்டுப்படுத்தி செயல்பட வேண்டும்:
-
இது நீதிமன்றத் தன்மை வாய்ந்த செயற்பாடாக இருப்பதால், பங்கேற்பவர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
-
காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தங்களது உறவினர் காணாமல் போனதைக் குறிக்கும் ஆவணத்தை சமர்ப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
-
பங்கேற்பவர்கள் தங்களது பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திர இலக்கம் மற்றும் முகவரியை நீதிமன்ற உத்தியோகத்தர்களிடம் பதிவு செய்ய வேண்டும்.
-
21 வயதிற்கு மேற்பட்டவர்களே இதில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
-
இந்த நடவடிக்கையின் போதிலும், காட்சிப்படுத்தப்படும் பொருட்கள் தொடர்பிலும், எந்தவொரு ஒலி அல்லது ஒளிப்பதிவு செய்யவும், இலத்திரனியல் சாதனங்களை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
காணாமல் போன நபர்களின் உறவினர்கள், தங்களுடன் சட்டத்தரணி ஒருவரை அழைத்து வர அனுமதிக்கப்படுவர்.
-
காட்சிக்கு வைக்கப்படும் சான்று பொருட்களை கைப்பற்றுவதும், தொடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
-
நடவடிக்கை நீதிமன்றச் செயற்பாடாக இருப்பதால், ஊடகவியலாளர்கள் அல்லது பிறர் இதனை ஒளிப்பதிவு செய்வதற்கும் அனுமதி வழங்கப்படாது.
மேலுள்ள விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக, நீதிமன்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.