பிரிட்டன் அரசாங்கம் தனது குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் திட்டத்தை வகுத்துள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து விசா விண்ணப்பதாரர்களுக்கும் அவர்களுடன் பயணிக்கும் உறவினர்களுக்கும் ஆங்கில மொழித் தேர்வை கடுமையாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பிரிட்டனில் குடியேற விண்ணப்பிக்க தேவையான கால வரம்பும் நீட்டிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில், நிரந்தர வசிப்பதற்கான தகுதி பெறும் கால வரம்பு தற்போதைய 5 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மாணவர்கள் தொடர்பிலும் சில முக்கியமான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு பிரிட்டனில் தங்கும் காலத்தை 18 மாதங்களாக குறைக்கும் திட்டம் அரசாங்கத்தின் கவனத்தில் உள்ளது.
மேலும், குடியேற்றத்தை முழுமையாக நம்புவதற்கு பதிலாக, நாட்டின் தொழிலாளர் சந்தையின் தேவைகளை கருத்தில் கொண்டு அதை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இவை அனைத்தும், குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதும், நாட்டின் எல்லை மீதான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக பிரிட்டன் அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.