கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா பெப்ரவரி 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் தேவையான ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டுள்ளதுடன், திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த இலங்கை கடற்படை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தலின்படி, வடக்கு கடற்படைப் பகுதித் தளபதியின் மேற்பார்வையில் கச்சத்தீவு முழுவதும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவிழாவை முன்னிட்டு சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகள், தற்காலிக தங்குமிடங்கள், வீதி அமைப்புகள், படகுத் தளங்கள், மின்சார வசதி ஆகியவை உறுதி செய்யப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அதேபோல், திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்காலிக உயிர்காக்கும் அணிகள் மற்றும் மருத்துவக் குழுக்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளன.
மேலும், இலங்கை கடற்படையால் கட்டப்பட்ட ஆலயத்தின் வண்ணத் துப்புரவு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளும் அதனை அணுகும் வீதிகளும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனுடன், காங்கேசன்துறை மற்றும் குறிகட்டுவான் துறைமுகங்களில் இருந்து கச்சத்தீவிற்கு பயணிக்கும் பக்தர்கள் மற்றும் திருவிழாவிற்குத் தேவையான உபகரணங்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.