கச்சத்தீவை மீண்டும் கைப்பற்றுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை இன்று தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சமர்ப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதிப்படுத்தவும், இலங்கை கடற்படையால் ஏற்படும் மீனவர்களின் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வாகவும் கச்சத்தீவை மீட்டுப்பெறுதல் அவசியம் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெறுவதற்கான அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களுடைய படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் இந்த தீர்மானம் ஒருமனதாக வலியுறுத்துகிறது.