நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் நெடுந்தீவு சென் அன்ரனிஸ் முத்தமிழ் நாடக மன்றம் வழங்கிய தவக்கால ஆற்றுகை “பலிக்களம்” (ஏப்ரல் 060 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில் 135 ஆற்றுகையாளர்களின் பங்கேற்புடன் அரங்கேறிய பலிக்களம் தவக்கால ஆற்றுகை மக்களின் பெருவரவேற்பினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட குருமுதல்வர் பி. ஜே. ஜெபரட்ணம் அடிகளார் கலந்து சிறப்பித்ததுடன்,நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன் மற்றும் நெடுந்தீவு கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் நெடுந்தீவு பங்கைச் சேர்ந்த அருட்தந்தையர்களும் கலந்துகொண்டனர்.
நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப. பத்திநாதன் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில், நெடுந்தீவு மகாவித்தியாலய ஆசிரியர் அருட்பணி சோபன் றூபஸ் அடிகளாரின் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் மங்கல ஒளியேற்றல் இடம்பெற்றதுடன், நிகழ்வுக்கான ஆசியுரையினை யாழ் மாவட்ட குருமுதல்வர் பி. ஜே. ஜெபரட்ணம் அடிகளார் வழங்கியிருந்தார். தொடர்ந்து “பலிக்களம்“ தவக்கால ஆற்றுகைக்காக பொறுப்பாக நின்று உழைத்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து தினைவுப் பரிசிலும் வழங்கப்பட்டதுடன், நன்றியுரையினை ஆசிரியை யூ. கிறிஷாந்தி வழங்கியிருந்தார்.
பிரமாண்ட மேடையில் 135 ஆற்றுகையாளர்களின் பங்கேற்புடன் நிகழ்வு சிறப்பாகவும் தேர்த்தியாகவும் இடம்பெற்றதுடன் கலைஞர்களது ஆற்றுகை சிறப்பாக இருந்தமை பாராட்டத்தக்கதுடன் பின்னணி கலைஞர்களது பங்களிப்புடன் ஒலி, ஒளி அமைப்பும் சிறப்பாக அமைந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இதேவேளை நிகழ்வினை பார்வையிடுவதற்காக நெடுந்தீவு மேற்கு மக்களின் வசதி கருதி விசேட இலவச பேரூந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சிறப்பாகும்.
கலைத்தூது அருட்பணி மரிய சேவியர் அடிகளாரின் எழுத்துருவில் உருவான “பலிக்களம்” தவக்கால ஆற்றுகை நெடுந்தீவு மண்ணில் பங்குத்தந்தை அருட்பணி ப. பத்திநாதன் அடிகளாரின் மேலான ஆலோசனை மற்றும்தலமைத்துவத்தின் கீழ் ஜோசெப் அனெக்ஷன் நெறியாள்கையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.