கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாட்டு கலந்துரையாடல் இன்று (பெப் 07) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலில் தலைமை உரையாற்றிய அரசாங்க அதிபர், கடந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றதற்காக கடற்படை மற்றும் தொடர்புடைய திணைக்களங்கள் வழங்கிய உறுதுணைக்கு நன்றியை தெரிவித்தார். மேலும், எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கான கடற்படையின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, விழா சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என கேட்டுக்கொண்டார்.
இந்த கலந்துரையாடலில், இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு, பாதுகாப்பு, சுகாதார வசதிகள், மலசலகூடங்கள், குடிநீர், ஒளி-ஒலி வசதிகள், கடல் மற்றும் தரைப்போக்குவரத்து ஏற்பாடுகள், தனியார் கடற்போக்குவரத்து படகுகளின் கட்டண நிர்ணயம், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக பேசப்பட்டன.
கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
- பக்தர்கள் எண்ணிக்கை:
- இலங்கையில் இருந்து 4,000 யாத்திரிகர்களும், இந்தியாவில் இருந்து 4,000 யாத்திரிகர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அதிகாரிகள் மற்றும் பிற உறுப்பினர்களை சேர்த்து மொத்தமாக 9,000 பேர் பங்கேற்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
- படகு போக்குவரத்து கட்டணங்கள்:
- குறிகட்டுவானிலிருந்து கச்சதீவுக்கு ஒரு வழிக்கட்டணம் ரூ.1300.00.
- நெடுந்தீவிலிருந்து கச்சதீவுக்கு ஒரு வழிக்கட்டணம் ரூ.1000.00.
- படகு சேவையில் ஈடுபடும் படகுகளுக்கான தேவையான அனுமதிப் பத்திரங்களை கடற்படையினரிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
- பேரூந்து சேவை:
- இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து துறையின் பேரூந்துகள் பயன்படுத்தப்படும்.
- மார்ச் 14 ஆம் தேதி காலை 4.00 மணி முதல் 11.30 வரை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேரூந்து சேவை இயக்கப்படும்.
- உணவுதானம்:
- யாத்திரிகர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதி இரவு உணவும், மார்ச் 15 ஆம் தேதி காலை உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில், யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், அருட்தந்தை பி. பத்திநாதர், இந்திய துணைத் தூதுவர் திரு இ. நாகராஜன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், 512வது பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, திணைக்களத் தலைவர்கள், யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை), கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் பிரதிநிதிகள், நெடுந்தீவு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.