பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை இன்று (ஜனவரி 26) தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள தமிழ் மக்களின் காணிகள் நீண்டகாலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.
போர் காரணமாக 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்த வலி.வடக்கு மக்கள், தங்கள் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில், விமான நிலைய விஸ்தரிப்புக்காக மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. அவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையே இன்று பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் தெல்லிப்பளை பிரதேச செயலர் எஸ்.சிவசிறி, நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், விலை மதிப்பீட்டு அதிகாரிகள், கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆயினும் மக்கள் தங்கள் காணிகளுக்கான நட்டஈடு தேவையில்லை என்றும், காணிகளே தமக்குத் தேவை என்றும் தெரிவித்தனர்.