யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத நடத்தையில் ஈடுபட்ட அரச பேருந்து நடத்துனருக்கு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின்படி,
லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த 27 வயதுடைய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர், நேற்று நயினாதீவிற்கு செல்ல அரசு பேருந்து மூலம் குறிகட்டுவான் நோக்கி பயணித்திருந்தார்.
பயணத்தின் போதே, அந்தப் பேருந்தின் நடத்துனர், பயணித்த பெண்ணுடன் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரனின் தலைமையில் செயற்பட்ட பொலிஸார், சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்தனர்.
பின்னர், சந்தேகநபர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிமன்றம் அவருக்கு ரூ.1,500 அபராதமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10,000 இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிட்டதோடு, 6 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் வழங்கியது.