2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெறும் நோக்குடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சின் உயரதிகாரிகளுடன் இன்று (மே 29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது, வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் மாவட்ட மட்டத்தில் மக்களின் அடிப்படை மற்றும் அவசரத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மாவட்டங்களின் அபிவிருத்தித் திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் மக்களின் அத்தியாவசிய அபிவிருத்தித் தேவைகள் தொடர்பிலும் விரிவான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபொன்சு, அரச நிதித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஈ. ஏ. ரத்னசீல, தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் நாயகம் எம். அனோமா நந்தனி மற்றும் நிதி அமைச்சின் பலர் கலந்து கொண்டனர்.