கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கார் ஒன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி நடந்த கோர விபத்தில், இந்திய துணைத்தூதரக அலுவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (மே 26) அதிகாலை 4.30 மணியளவில் ஓமந்தை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் காரை ஓட்டிச் சென்ற சாரதி, பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா என்ற இந்திய துணைத்தூதரக அதிகாரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட புனித யாத்திரைக்காக வடஇந்தியாவின் இமயமலைச் சாரலுக்கு சென்ற இவர், கட்டுநாயக்கா விமான நிலையம் வழியாக இலங்கைக்குத் திரும்பி, காரில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தபோதே விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காரில் பயணித்த அவரது குடும்ப உறுப்பினர்களான மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட மூவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டது, சாரதி தூங்கியதன் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.