2025 ஆம் ஆண்டில் பாடசாலை நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்கள் பாடசாலைகளை நடாத்தும் பழக்கத்தை பின்பற்றினாலும், அடுத்த வருடத்தில் பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை 181 நாட்களாகக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
முதல் தவணையின் தொடக்கத்தில் தாமதம் ஏற்பட்டு, அதிகமான அரசு விடுமுறைகள் உள்ளதால், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள், அரச பாடசாலைகள் மற்றும் பிரிவெனா மாணவர்களின் வருடாந்திர கற்றல் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை ஜனவரி 2 முதல் 24 வரை, முதல் 3 வாரங்களில் நிறைவு செய்யப்படும்.
2025 ஆம் கல்வியாண்டு தொழில்நுட்ப ரீதியாக ஜனவரி 27 அன்று ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அடுத்த வருடத்தில் உள்ள 26 பொது விடுமுறைகளில், 4 விடுமுறைகள் மட்டுமே வார இறுதி நாட்களுடன் இணைந்து வருகின்றன. ஏனைய விடுமுறைகள் அனைத்தும் வாரநாட்களில் வருவதால், பாடசாலைகளை 210 நாட்கள் நடத்த இயலாது. எனவே, பாடசாலை நாட்கள் 181 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.